Friday, November 09, 2007

எச்சரிக்கை - அவசரம்

எச்சரிக்கை

அன்பு நண்பர்களே

முத்தமிழ் குழுமத்தின் இணைய சொல்லி அழைப்பு வருவதாக ஒரு சில நண்பர்கள் தகவல் அனுப்பியிருக்கின்றனர். முத்தமிழ் கூகிள் குழுமத்தில் உறுப்பினராக சேர யாருக்கும் தனியாக அழைப்பு அனுப்பப்படுவதில்லை. ஆகவே உங்களுக்கும் முத்தமிழ் பெயரில் குழுமத்தில் இணைய சொல்லி அழைப்பு வந்தால் அந்த மடலை உடனடியாக நீக்கிவிடுங்கள்.அந்த அழைப்பின் மூலம் உங்கள் கடவுச்சொல் திருடப்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இது மட்டுமல்ல வேறு எந்த முகவரியிலிருந்து இணைய சொல்லி அழைப்பு வந்தாலும் அதை திறக்க வேண்டாம். உங்கள் பெயர் மற்றும் கடவுச்சொல்லை கேட்கும் எந்த இணைப்பையும் திறக்கவேண்டாம். பெயர் மற்றும் கடவுச்சொல்லை கொடுக்கவும் வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.

முத்தமிழில் இணைய விருப்பமுள்ளவர்கள் குழும முகவரிக்கு நேரடியாக விண்ணப்பித்து சேர்ந்து கொள்ள முடியும். குழுமம் உங்களின் கடவுச்சொல்லை கேட்பதில்லை.

முத்தமிழ் குழுமத்தின் மீதான இந்த தாக்குதல் ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்டோ செயல்படும் ஒரு சில விஷமிகளின் வேலையே. விரைவில் அவர்களின் முகத்திரை கிழிக்கப்பட்டு வெளிச்சத்திற்கு கொண்டுவரப்படுவார்கள் என்பதையும் சரியான தண்டனைக்கு ஆளாவார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

அனைவரும் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Wednesday, November 07, 2007

தீபாவளி - மலரும் நினைவுகள்

தீபாவளி என்றவுடன் எனக்கு என் சின்ன வயதில் கொண்டாடிய பல தீபாவளிகள் இனிய நினைவுகளாக வருவதை ஏனோ தடுக்கமுடியவில்லை. இப்படித்தான் ஒரு தீபாவளி நாளில் நடந்த ஒரு சம்பவம்

தீபாவளி என்றாலே கண்டிப்பாக காலையில் இட்லி இருக்கும். என்னடா இவன் இட்லியை போய் இவ்வளவு பெருசா சொல்றானேன்னு நினைக்கலாம். எங்க ஊரில் காலையில் சிற்றுண்டி என்பதெல்லாம் பொதுவாக கிடையாது. ஒம்பது மணிக்கு சாப்பாடு தான். மதியம் ஏதேனும் சிற்றுண்டி, காப்பி கிடைக்கும்.

என்றாவது ஒரு நாள் தான் இட்லி என்பதால் எல்லா வீடுகளிலும் மாவு அரைக்கும் ஆட்டாங்கல் இருப்பதில்லை. அதனால் இருக்கும் சிலரது வீடுகளில் போய் வரிசையில் காத்திருக்கவேண்டும். எங்க அம்மா காலையிலேயே ஊறவைத்த அரிசி உளுந்து முதலியவற்றை என்னிடம் கொடுத்து அங்கு நிற்க செய்துடுவாங்க. நானும் பொறுமையாக காத்திருப்பேன். அதில் ஒரு சுகம்.
ஏன்னா அடுத்த நாள் இட்லி கிடைக்குமே. பிறகு அம்மா வந்து மாவரைத்து எடுத்து செல்வதற்குள் இரவு ஆகிவிடும்.

இதற்கிடையில் தையல்காரரிடம் போய் துணி தைத்தாகிவிட்டதா என பார்க்கவேண்டும். நம்ம தையல்காரர்களுக்கு விசேஷ்நாட்களில் தான் அதிக துணி வருவதால் ரொம்ப கடைசியாத்தான் எங்கள் துணி கிடைக்கும். சில நாட்களில் பொத்தான் போடும் வேலையும் நானே செய்து துணியை வாங்கி வருவேன்.

கையில் துணி கிடைப்பதற்கு சில சமயம் பத்து மணி கூட ஆகிவிடும் அதுவரை குளிரில் காத்திருந்து வாங்கிட்டு வந்தால் வீட்டில் அப்பாவிடம் திட்டு வேறு வாங்கவேண்டும்.

அப்போழுதெல்லாம் எட்டு மணிக்கே ஊர் அடங்கிவிடும். இப்பத்தான் தொலைக்காட்சி தொடர் வந்தப்பிறகு பதினோரு மணி வரை யாரும் உறங்குவதில்லை.

இரவு முழுவதும் தூக்கமே வராமல் புரண்டுக்கொண்டிருப்போம். அம்மா அதிகாலை மூணு மணிக்கே எழுந்து இட்லி போட ஆரம்பிச்சிடுவாங்க. கூடவே நானும் எழுந்து அம்மா பக்கத்தில் தூங்கி வழிந்துக்கொண்டே அடுப்பருகில் உட்கார்ந்திருப்பேன்.
மணி ஐந்தானவுடன் தூரத்தில் இருக்கும் வினாயகர் கோயிலின் ஒலிப்பெருக்கியில் சுப்ரபாதம் கேட்க ஆரம்பித்துவிடும். உடனே புதுத்துணி போடும் ஆசையில் அரக்கப்பரக்க குளித்துவிட்டு தயாராகிவிடுவதே வாடிக்கை.

இப்படித்தான் ஒரு நாள் குளித்துவிட்டு துணி எடுப்பதற்காக அடுத்த அறைக்குள் போனேன். அங்கு மின்விளக்குக்கு பொத்தான் கிடையாது. மின் விளக்கை போட அதனுடன் இணைந்த ஃப்ளக்கை இணைக்கவேண்டும். பொதுவாக விளக்கு வெளிச்சத்தில் தான் இணைப்போம். மேலும் எனக்கு உயரம் போதாதால் அப்பா தான் இணைப்பார். அப்பா அந்த அறையில் தான் படுத்து தூங்கிக்கொண்டிருக்கிறார். எழுப்பினால் திட்டுவார் என்பதால் மிகவும் அமைதியாக கட்டிலில் மீது ஏறி நின்று ஃப்ளகை சொருகப்போனேன். ஆனால் எனது அவசரத்திலும் பரப்பரப்பிலும் ப்ளக்கின் பின்னை மாற்றி சொருகி விட்டேன். சரியாக சொருகாததால் லைட் எரியவில்லை. என்னடா இது என குழம்பி போய் ஆட்டி ஆட்டி பார்த்ததும் ஃப்ளக்கின் ஒரு பின் உடைந்து உள்ளே மாட்டிவிட்டது.

என்ன செய்வது என்று புரியவில்லை. அப்பாவை கூப்பிட்டால் திட்டுவார். சரி என ஒரு முடிவோடு மின்சாரம் பாய்வது பற்றிய பிரக்ஞையே இல்லாமல் அதை பிடுங்குவதற்காக கையில் தொட்டேன். அவ்வளவு தான் !


அம்மா!! என்ற சத்தத்துடன் அப்பா மீது விழுந்தேன். திடீரென இப்படி நேர்ந்ததால் அப்பாவும் அலறி அடித்து கொண்டு எழ.. இருட்டில் ஒன்றும் தெரியாமல்..... ஒரே குழப்பம்... அம்மா அரக்க பரக்க உள் அறையிலிருந்து விளக்கை எடுத்து வந்து பார்க்க.. கட்டிலின் முனை என் தலையில் பட்டு வீக்கத்துடன் நான் அழுதுக்கொண்டிருக்க, அப்பாவுக்கு வந்த கோபத்தில் இன்னும் இரண்டு அடி எனக்கு கொடுக்க.... இப்படியாக ஒரு அருமையான மறக்க முடியாத தீபாவளி.

அனைவருக்கும் தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்.

Wednesday, October 31, 2007

கடவுச்சொல் திருட்டு

அன்பு நண்பர்களே

இட்லி வடைக்கு நேர்ந்தது போல எனக்கும் நேர்ந்தது. ஓசை செல்லாவின் முகவரியிலிருந்து வந்த மடலை திறந்து ஓர்குட்டில் நுழைய எத்தனித்து என் கடவுச்சொல்லை இட்டதால் என் கடவுச்சொல் திருடப்பட்டுவிட்டது.

என்னால் வலைப்பதிவுக்குள்ளும் நுழைய முடியவில்லை. ஓசையை தொடர்பு கொண்டப்போது அவருக்கும் அதே போல மடல் வந்தது என்றார்.

என் கடவுச்சொல்லை திருடியவனின் முக்கிய குறிக்கோள் முத்தமிழ் கூகில் குழுமத்தை ஆக்கிரமிக்கவேண்டும் என்பதே. என் கடவுச்சொல் மூலம் நிர்வாகத்திற்குள் நுழைந்து மாடரேட்டர்கள் அனைவரையும் நீக்கியிருக்கிறான்.

ஆனால் அவனது துரதிர்ஸ்டம் ஓனரை நீக்க முடியவில்லை. கூகிளில் இது ஒரு வசதி. ஓனர் ஐடி மூலம் மீண்டும் முத்தமிழில் நாங்கள் நுழைந்து எனது திருடப்பட்ட முகவரியை நீக்கிவிட்டோம்.

பிறகு மூன்று நாட்கள் அமைதியாக பார்த்துக்கொண்டிருந்து விட்டு இன்று 31.10.07 காலையில் எனது பெயரில் முத்தமிழுக்குள் நுழைந்திருக்கிறான். உடனே எனக்கு தகவல் கிடைத்தது.

நண்பர்கள் பேசி பார்த்தனர். அவன் ஒருவார்த்தை பதிலிலேயே பேசியிருக்கிறான்.

ஆனால் அதே நேரத்தில் ஒரு சில மடல்களை எனது முகவரியிலிருந்து பலருக்கு பார்வேர்ட் செய்திருக்கிறான். இதிலிருந்து இவனது நோக்கம் என்ன என்பது தெளிவாகிறது.

இந்த சமயத்தில் கூகில் மூலம் மீண்டும் எனது ஐடி திரும்ப கிடைத்ததால் நான் உள்நுழைந்து கடவுச்சொல்லை மாற்றிவிட்டேன்.

யார் என கண்டுப்பிடிக்கமுடியவில்லையென்றாலும் இது கூகிள் தமிழ் குழூமங்கள் மற்றும் பதிவுகள் பற்றி அதிகம் தெரிந்த நபர் என்பது மட்டும் தெளிவு.

என் ஐடி திருடப்பட்டதை அறிந்து குழுமங்கள் மற்றும் பதிவுலகில் இருந்து பலரும் ஆறுதலும் உதவிகளும் அளித்தனர். அனைவருக்கும் மிகவும் நன்றி.

Thursday, August 16, 2007

கவிதை பாடும் சில மலர்கள்

இதழ்கள் இல்லாத மலர்களா? வளர்ந்து வரும் கவிதாயினி அனிதாவின இதழ்கள் வெறும் மலர்களின் இதழ்களன்று. இதில் வித்தியாசமான பல்வேறு இதழ்களும் இருக்கின்றன.
கரிசனம்
அனல் தகித்து
எடை கூடிய உடலின்
முறுக்கி பிழியும் வலி பொறுத்து
இல்லாத வெளியில்
என்னுடன் நடந்துக்கொண்டிருந்தேன்
தொலைபேசியின் இரக்கமற்ற சிணுங்கலில்
உலுக்கி எழுப்பி
உறங்குகிறாயா என்கிறாய்.
ஆமாம்.

திறமை வாய்ந்த இக்கவிதாயினி மிகவும் குறைவாகவே எழுதியிருக்கிறார். இன்னும் நிறைய எழுதவேண்டும். சமீபத்தில் இவரது கவிதைகள் ஆனந்தவிகடனில் வந்தன என்பது கூடுதல் செய்தி. இவரது ஒற்றை ரோஜா என்னும் கவிதையை படியுங்கள் உங்களுக்கே புரியும்.

வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் ! நிறமில்லாத மலர்களா? நிறங்கள் என தன் வலை மலரை குறிப்பிடும் செல்வநாயகி சக்தி என்ற மற்றொரு வலைமலரையும் நடத்திவருகிறார்.
அரவமில்லாத மௌனங்களில்
புல்வெளியில் உலவும் சுதந்திரமான முயல்குட்டியைப்போல்
மனதில் அலைந்துகொண்டிருக்கிறது
ஒரு கிறுக்கியாக வாழும் ஆசை
என வித்தியாசமாக ஆசைப்படும் செல்வநாயகி ஒரு சிறந்த பேச்சாளர் என்பதையும் இங்கே குறிப்பிட்டேயாகவேண்டும். இவரது நான் ரசித்த பயணம் படிக்க வேண்டிய ஒரு நல்லப் படைப்பு.

காகித மலர்கள் என்று தன் வலைமலரை தன்யா குறிப்பிட்டாலும் அவை உண்மையிலேயே காகித மலர்களல்ல. ஓலமடங்கிய வெளிகளில் என தொடங்கும் கவிதையில்
குளிர் இரவுகளில்
மெல்லிய கம்பளிப் போர்வையைப் போன்ற
மிருதுவான உன் உடலை,
என்னைப் போர்த்தும் விரல்களை
கதகதப்பான வார்த்தைகளை
தேடித் தேடி
சலிப்புறுகிறது மனசு
என்னும் வரிகளே எடுத்துக்காட்டு. தொலைவில் கேட்கும் உன் குரலை என் வீட்டுச் சாளரங்கள் தடுக்கின்றன என்னும் கவிதையும் படிக்கவேண்டிய ஒரு கவிதை.


விடியலே!
உன்னை என்னால் பார்க்க முடிகிறது.
ஏனெனில்
நான் விழித்துக் கொண்டேன்
என கவிதை மூலம் விழித்துக்கொள்ளவைக்கும் ஸ்வாதியின் மைத்துளிகள் மலரிலிருந்து உதிரும் உதிரிப்பூக்களை போல. தொடர்ந்து எழுதிவரும் இவர் நல்லதொரு கவிதாயினியாக விரைவில் வலம் வருவார் என எதிர்ப்பார்க்கலாம். இவருடைய தமிழ் பிரவாகம் என்னும் பதிவில் தமிழ் பிரவாகம் குழுமத்தில் பலரும் எழுதிவரும் படைப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன.

கண்ணம்மாவை பாரதி குழந்தையாகவும் காதலியாகவும் மட்டும் தான் பார்த்தான்..ஆனால் நான் என்னுடைய கண்ணம்மாவை மேலும் ஒரு படியேற்றி வாழ்வியலின் சகலமும் உணர்ந்த பெண் போராளியாகத் யுத்த பூமியில் அடியெடுத்து வைக்க விட்டிருக்கிறேன்! என கண்ணம்மா என்ற தன் மற்றொரு பதிவில் குறிப்பிட்டிருக்கும் ஸ்வாதி இங்கும் பல எழுச்சியூட்டும் கவிதைகள எழுதியிருக்கிறார்.

உலகிலுள்ள அனைவரும் எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவை எண்ணல் வேண்டும். என இருந்தால் எப்படி இருக்கும். அந்த எண்ணத்தையே தன் வலைமலரின் தலைப்பாக்கியிருக்கும் ஷைலஜாவின் வலைமலரில் உங்களுக்கு கவிதை, கட்டுரை, சிறுகதை என கதம்பமாலையாக எல்லாம் கிடைக்கும். அனைவரும் படித்து மகிழவேண்டும் என்ற ஒரே நோக்கில் எழுதிவரும் இவரது ஒவ்வொரு படைப்பும் படிக்கும் ஒவ்வொருவருடைய முகத்திலும் புன்னகையை தோற்றுவிக்கும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. அதுவே இவரின் வெற்றியின் ரகசியமும் கூட. தமிழ் மொழியில் ஆழ்ந்த புலமை உள்ள இவர் ஒரு சிறந்த பாடகி என்பதும் வர்ணனையாளர் என்பதும் கூடுதல் தகவல்கள். உன்னை நினைக்கையிலே என்னும் இவரது கவிதை சமீபத்தில் அன்புடன் குழுமத்தில் நடந்த ஒலிவடிவ கவிதைப்போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றுள்ளது. ஷைலஜாவின் சிறு கவிதை ஒன்று:
மழை வேண்டி யாகம் செய்வர்
யாகத் தீ சுற்றி வலமும் வருவர்
நில மகளை பூமித் தாயென்று
பூஜிப்பர்
தன்னில் காணா இறைவனை
விண் நோக்கி தியானிப்பர்
காற்றுக்கு உண்டா கைகுவித்து
வரவேற்பு?
இலவசங்கள் என்றைக்குமே
இரண்டாம்பட்சம்தான்.

மலர்கள் அதிகமாக மலர்வது இளவேனில் காலத்தில் தான். இளவேனில் என தன் வலைமலரை குறிப்பிடும் தமிழ் நதி ஒரு வளர்ந்து வரும் கவிதாயினி. இவரது கவிதை தொகுப்பு சமீபத்தில் மதுரை புத்தக கண்காட்சியில் வெளியிடப்பட்டிருக்கிறது எனக் கேள்விப்பட்டேன். ஆனந்த விகடனிலும் இவரது கவிதைகள் வந்துள்ளன. சமீபக்கால ஈழத்து கவிதாயினிகளில் இவர் மிகவும் குறிப்பிடத்தக்கவர். மெல்லிய சோகம் இழையோடும் இவரது கவிதைகளை படித்தப்பின் ஒரு கணமாவது நம்மை அதிர செய்யும் என்பது நிதர்சனம்.
காலப்பெருவெளியில்
சருகாகி அலைந்தபின்
உன் விழி வழி கசியும் ஒளி குடித்து
மீளத் துளிர்க்கும் இத்தருணம்
காற்றை நிறைக்கிறது
முன்பொருநாள் மெல்லிருளில்
திடீரென அலமலர்த்தி முத்தமிட்ட
இதழின் எச்சில் வாசனை
இவரது நதியின் ஆழத்தில் என்னும் கவிதையை பாருங்கள் புரியும்.

மலர்களை ரசிக்க ஒரு மனம் வேண்டும் அதுவும் மனம் நமது உண்மை முகத்தை வெளிப்படுத்தும் வல்லமை படைத்தது. அதையே தன் வலைமலரின் தலைப்பாக வைத்திருக்கும் வேதாவின் மனம் - உண்மை முகம் வளர்ந்து வரும் ஒரு கவிதாயினியை நமக்கு வித்தியாசமான முறையில் அறிமுகம் செய்கிறது. தனது மனதில் தோன்றுபவற்றை கவிதைகளாக கொட்டிவிடும் இவரது சமீப கால கவிதைகளில் நல்ல முதிர்ச்சியும் வளர்ச்சியும் தெரிகிறது. சீக்கிரம் கேட்டுவிடு எனக்கான கேள்வியை என்னும் அவரது கவிதையில்:
அலைபேசி அரட்டைகளில்
அபிரிதமான சொற்களை
கடன் வாங்கியும் பேசதயங்காத
நம் அதரங்கள்
ஏனோ
சந்திப்புகளின் போதுமட்டும்
ஊமையாகி விடுகின்றன
என கவிமொழி பேசுகிறார். இவரது வேதா என்னும் மற்றொரு வலைமலரில் பல சுவையான கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

Saturday, May 26, 2007

நீங்கள் கல்ஃபில் வேலை செய்பவரா?

ஆண்: "டாக்டர் நான் ஒரு மாச லீவில் வந்திருக்கேன். எனக்கு ஒரு முழு செக்கப் செய்யணும்."

டாக்டர்: "நீங்க எதிர்லெ இருக்கற டாக்டர்கிட்டே போயிருக்கணும்.அந்த போர்டெ பாருங்க"

ஆண்: "இல்லெ டாக்டர், நான் உங்களெத்தான் பார்க்கவந்தேன்"

டாக்டர்: "பாருங்க சார், நான் வெட்ரினரி டாக்டர். விலங்குகளுக்கு மட்டும் தான் மருத்துவம் பார்க்கிறேன். மனுசங்களுக்கல்ல."

ஆண்: "எனக்கு அது நல்லா தெரியும் டாக்டர். அதனால் தான் நான் உங்களிடம் வந்திருக்கேன்"

டாக்டர்: "என்னங்க சார் புரியாத ஆளா இருக்கீங்க. நீங்கள் என்னை போல மனிதர். பேசுகிறீர்கள், சிந்திக்கிறீர்கள், நீங்கள் மிருகமல்ல. என்னால் முடியாது."

ஆண்: "எனக்கு தெரியும் டாக்டர், நான் மனிதன் தான். ஆனா மொதல்லெ நீங்க என்னுடைய பிரச்சினைகளை கொஞ்சம் தயவுசெய்து கேளுங்களேன்"

டாக்டர்: "சரி சரி சொல்லுங்க"

ஆண்: "நான் தூங்கும்போது நாயெ போல எச்சரிக்கையா தூங்கிகிட்டே என்னுடைய ஆபீஸ் வேலெ பத்தியே யோசிச்சிகிட்டிருப்பேன். "
"காலையில் குதிரையெ போல எழுந்திருப்பேன்."
"காக்கா குளியல் குளிப்பேன்"
"மான் போல ஆபீசுக்கு ஓடுவேன்"
"முழுநாளும் கழுதையெ போல வேலை செய்வேன்"
"இடைவிடாமெ பதினோரு மாசம் எருது போல வேலை வேலைன்னு சுத்திகிட்டே இருப்பேன்"
"எனக்கு மேலெ இருக்கறவங்களுக்கு முன்னாலெ வாலெ ஆட்டிகிட்டே இருப்பேன்"
"என்னிக்காவது நேரம் கிடெச்சா என் குழந்தைங்க கூட குரங்கு போல சேட்டை செஞ்சி விளையாடுவேன்"
"என் பொண்டாட்டிக்கு முன்னாலெ முயல் மாதிரி ஒடுங்குவேன்"

டாக்டர்: "நீங்க கல்ஃப்லெ வேலெ செய்யறீங்களா?"

ஆண்: "ஆமாம் டாக்டர்!. "எப்படி கண்டுபிடிச்சீங்க?"

டாக்டர்: "இவ்வளவு பெருசா சொல்றதுக்கு பதிலா மொதல்லெயே கல்ஃப்லெ வேலெ செய்யறேன்னு சொல்லியிருக்கலாமில்லெ." "வாங்க, நீங்க சரியான இடத்துக்கு தான் வந்திருக்கீங்க!" "வேறெ யாரும் என்னெ விட நல்லா உங்களுக்கு சிகிச்சை தர முடியாது"

நன்றி: அனுசுயா
ஆங்கிலத்திலிருந்து

Wednesday, January 17, 2007

இப்படியும் ஒரு பொங்கல்



எல்லோரும் பொங்கல் விழா எல்லாம் முடிஞ்சி சர்க்கரைப் பொங்கல் கரும்பு எல்லாம் சாப்பிட்டு சந்தோசமா இருக்கீங்க போலெ.

அட, பொங்கலெ பத்தி அவனவன் பதிவு எழுதறானே, நம்ம வீட்டு பொங்கலெ பத்தியும் எழுதலேன்னா எப்படின்னு தோணிச்சி.

பொங்கல் வாழ்த்துக்கள் ஒரு வாரமாவே வந்துட்டு இருந்ததாலெ இந்த தடவெ பொங்கல் நாள் மறக்கமுடியாமெ அப்படியே மனசிலெ பதிஞ்சிடிச்சி.

காலையில் எழுந்ததும் காப்பி போட்டு குடித்துக் கொண்டே தூங்கிகிட்டிருந்த மனைவிகிட்டெ பொங்கல் வாழ்த்துக்கள் சொன்னேன். "ம்ம்... சரி"... வாழ்த்துக்கள்.

"ஆமா இன்னிக்கி எத்தனை மணிக்கு பொங்கல் வைக்கப்போறோம்".

"ஏன் மாமா தூங்கிகிட்டிருக்கேனென்னு தெரியலெயா?" உங்களுக்கு இப்பத்தான் பொங்கலெ பத்தி கேக்கணுமா"

"எனக்கு இன்னிக்கி ஆபிஸ்லெ முக்கியமான வேலை இருக்கு, பொங்கல் எல்லாம் சாயங்காலம்தான்"

"என்ன நீ இப்படி சொல்லறே, எல்லோரும் காலையில் தானை குளிச்சி, புதுத்துணி போட்டு கொண்டாடுவாங்க"

"நீங்க இப்ப ஆபிசுக்கு போறிங்களா, இல்லையா?" தூக்க கலக்கத்தில் குரல் வலுக்கவும் எப்படியோ போகட்டும்னு அலுவலகம் கிளம்பிவிட்டேன்.

எப்பவும் போல அலுவலகம் வந்து கணினியை திறந்ததும். "அண்ணா, பொங்கல் வாழ்த்துக்கள்" "பொங்கல் சாப்பிட்டாச்சா" "நண்பரே பொங்கல் வாழ்த்துக்கள்" என ஒரே பொங்கலோ பொங்கல் தான்.

சரி நம்ம பொளப்பெ சொல்லி இவங்க மூடையும் கெடுக்க வேண்டாமேன்னு நினெச்சி, எல்லோருக்கும் வாழ்த்துகள் சொன்னேன்.

மதியம் ஒரு மணிக்கு வீட்டுக்கு தொலைபேசி, "என்ன பொங்கல் ரெடியாகிடுச்சா"

"ஏன் மாமா நா இப்பத்தானே ஆபிஸ்லெருந்து வர்றேன், இந்த பசங்களுக்கும் இன்னும் சாப்பாடு கொடுக்கலே, உங்களுக்கு பொங்கல்தான் முக்கியமா போச்சா"

"இல்லே அது வந்து ..... "

"சரி போனெ வைங்க, எனக்கு வேலை இருக்குது"

"சாப்பாடுக்கு வந்துடட்டுமா"

"நான் மெக்டொனால்டிலெருந்து எங்களுக்கு வாங்கிட்டு வந்துட்டேன்", உங்களுக்கு வேணும்னா தோசை போட்டு தர்றேன், வாங்க"

"தோசையா, இன்னிக்கி பொங்கல்ங்கறதெ மறந்துட்டெயா"

"அய்யோ, உங்க கூட தாங்க முடியலெயே",

"சரி சாயங்காலம் பொங்கல் பண்ணுவோம், இப்ப ஹோட்டல்லெயே சாப்பிட்டு வந்துடுங்க."

அலுவலக மேலாளரிடம் பொங்கல்னு சொல்லி ஒரு மணி நேரம் முன்அனுமதி கேட்டுட்டு நேரா வீட்டுக்கு பக்கத்திலிருக்கும் ஓட்டலில் போய் சாப்பாடு சாப்பிட்டு விட்டு (அங்கெ கொஞ்சமா சாஸ்திரத்துக்கு சக்கரை பொங்கல் கொடுத்துட்டாங்க) வீட்டுக்கு போனேன்.

சன் தொலைக்காட்சியில் மூழ்கியிருந்த மனைவி, நிமிர்ந்து பார்த்து
"என்ன மாமா, இன்னிக்கி சீக்கிரமா வந்துட்டீங்க"

"பொங்கல்!, அதான்."

என்னை ஒரு மாதிரியாக பார்த்த மனைவி, "சரி, சரி, வேலைக்காரி வந்துடட்டும், பாத்திரம் எல்லாம் கழுவாமெ அப்படியே இருக்கு, அவ வந்து கழுவி கொடுத்த பின்னாலெ பொங்கல் வைக்கறேன். சாயங்காலம் தானே எல்லோரும் வர்றாங்க"

"ம்ம்ம் சரி, சரி, குழந்தைங்க சாப்பிட்டாங்களா?"

"ஓ அப்பவே சாப்டாச்சே, இப்ப உள்ளே படிச்சிகிட்டிருக்காங்க"

"ஆமா, வடை செய்யறெயா"

"வடையா? பொங்கலுக்கு வடை யாராவது செய்வாங்களா?"

"இல்லே, செஞ்சா நல்லா இருக்குமேன்னு"

"சரி, சரி, செய்யறேன், கொஞ்சம் நேரம் பேசமெ இருங்க, இந்த நிகழ்ச்சி முடியட்டும்"

எனக்கும் களைப்பாக இருந்ததால் [ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்ட மயக்கம்(?!)] கொஞ்ச நேரம் படுக்கலாம்னு உள்ளே போனேன்.

பாத்திரங்களை கழுவும் சத்தம் கேட்டு எழும் போது மணி ஐந்தரை. அய்யோ அஞ்சரை ஆச்சேன்னு வேகமா எழுந்து ஹாலுக்கு போனேன். மனைவி எப்பவும் போல பொங்கல் நிகழ்ச்சிகளில்

"என்ன, இன்னும் பொங்கல் பண்ணலெயா?"
"ஏன் மாமா தூங்கி எந்திரிச்சி வந்து கத்தறீங்க, கொஞ்ச நேரம் சும்மா இருங்க எல்லாம் ரெடியாகிட்டிருக்கு"

சமையலறைக்கு போய் பார்த்தேன். அடுப்பை வேலைக்காரம்மா சுத்தம் செஞ்சிட்டு இருந்தாங்க. என்னடா இதுன்னு யோசிச்சிகிட்டிருக்கும் போது கதவு தட்டற சத்தம். போய் திறந்தால் குழந்தைகள் ட்யூசனிலிருந்து வந்துவிட்டார்கள்.

அவர்களை பார்த்ததும் வீட்டுக்காரி, சரி சரி, எல்லோரும்னு போய் முகம் கழுவிட்டு வாங்கன்னு சொல்லி, பூஜைக்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பிச்சாங்க (அப்பாடா தொலைகாட்சிக்கு விடுதலை).

அட பொங்கலே இன்னும் தயாராகலெயே, அதுக்குள்ளே எப்படி பூஜைன்னு யோசிச்சிகிட்டிருக்கறப்ப வாழை இலையை இரண்டாக கிழிச்சி எடுத்துட்டு ஹாலுக்கு போனாங்க. அங்கெ இருந்த மின் சமைகலனை (Electric Cooker) திறந்தாங்க. உடனே என் சின்ன பெண் பொங்கலோ பொங்கல் என்று கூவ நானும் பொங்கலோ பொங்கல் என பின்பாட்டு பாட பொங்கலுக்கான பூஜை முடிந்தது. (நம்புங்க, புது பானைக்கு பதிலா மின்சமைகலன்)

பிறகென்ன கொஞ்சம் கொஞ்சம் பொங்கல் எல்லோருக்கும் மின்கலனிலிருந்து எடுத்து கொடுத்தார்கள்.

சும்மா சொல்லக்கூடாது, நல்லாத்தான் இருந்திச்சி.
சாயங்காலம் வடை, சாப்பாடு என செஞ்சாங்க.அப்புறம் என்ன நண்பர்களும் தம்பிகளும் வர மின்சமைக்கலனில் செய்யப்பட்ட எங்க வீட்டு பொங்கல் இரவு விருந்துடன் அமர்க்களமாக முடிந்தது.

பொங்கலோ பொங்கல்.

Saturday, December 23, 2006

அழியாதக் கோலங்கள் - 2

எங்க ஊரெ சுத்தி மலைகளும், தேயிலை தோட்டங்களும், கொஞ்சம் தூரம் சென்றால் காடுகளும் இருக்கும். எனக்கு சின்ன வயசிலிருந்தே காடுகளின் சுற்றுவதில் ஒரு அலாதியான மகிழ்ச்சி. எனக்கு நினைவு தெரிந்து நான் காடுகளில் நண்பர்களுடன் சுற்ற தொடங்கிய போது எட்டு ஒன்பது வயதிருக்கும். அதற்கு முன்பும் அம்மாவோடு காடுகளில் சுள்ளி பொறுக்க போயிருக்கிறேன்.

மாலை நான்கு மணிக்கு பள்ளி முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து பையை தூக்கிப்போட்டுவிட்டு, கிடைக்கும் வரக்காப்பியையும் ஒரு மடக்கு குடித்துவிட்டு காட்டை நோக்கி படையெடுப்பது அடிக்கடி நடக்கும்.

எங்க ஊருக்கு அருகிலுள்ள காட்டில் குரங்குகள் அதிகம் இருப்பதால் கொரங்குப்பிள்ளை சோலை என்றே அதற்கு பெயர். அது என்னவோ தெரியவில்லை பெரிய மிருகங்கள் அவ்வளவாக அதிகம் பார்க்க வாய்ப்பு இருப்பதில்லை. ஒரே ஒரு முறை புலியை பார்த்திருக்கிறோம்.
மற்றப்படி காட்டாடு, காட்டெருமை, குள்ளநரி, முயல், காட்டுக்கோழி, முள்ளம்பன்றி, கீரி, பாம்புகள், மான் என இப்படித்தான்.

பொதுவா சனி, ஞாயிற்றுக்கிழமை வந்துவிட்டாலே நாங்கள் காட்டு வாசிகள் ஆகிவிடுவோம். ரொம்ப தூரம் போவோம். அதாவது காலையில் வீட்டில் கேழ்வரகு களியை சாப்பிட்டுவிட்டு போனால் மாலை வரை காடுகளில் சுற்றுவதும், பழங்கள் பறிப்பதும், காட்டாறில் குதித்து நீச்சல் அடிப்பதும், காட்டுக்கோழிகள், முயல்களை துரத்துவதும், ஆற்றில் நண்டு பிடிப்பதும் என எதாவது ஒன்று நடந்துக்கொண்டே இருக்கும்.

எங்கள் குழுவில் மொத்தம் நாலு பேர்.... மணிகண்டன், தேவன், சதாசிவன், நான். இதில் மணிகண்டனும் நானும் மரமேறுவதில் கொஞ்சம் கில்லாடிகள். மற்ற இருவரும் கொஞ்சம் பயப்படுவார்கள். எனக்கு எந்தெந்த இடத்தில் எந்தெந்த பழமரம் இருக்கு என்பது அத்துப்படி. அதனால் நண்பர்கள் என்னையே தொடர்வார்கள்.

நாவல் பழ காலத்தில் சில நாட்களுக்கு முன்பே போய் மரங்களை நோட்டமிட்டுவிட்டு வந்துவிடுவோம். காய்களை பார்த்து எப்பொழுது பழமாகும் என ஒரு கணக்கு வைத்து சரியாக அந்த நாளில் அங்கு போவோம்.பொதுவாக மலைக்காடுகளில் கிடைக்கும் நாவல் பழங்கள் சிறியதாகவும், மிகவும் சுவையாகவும் இருக்கும். சமவெளியில் அந்த சுவையை நான் இதுவரை அனுபவித்ததே இல்லை. சில நாவல் மர இலை குருத்துகளும் சுவையாக இருக்கும்.

ஒரு நாள் இப்படித்தான் நான், மணிகண்டன், தேவன் மூன்று பேரும் ஒரு நாவல் மரத்தில் ஏறி பழம் பறித்து சாப்பிட்டுக்கொண்டும். பைகளில் நிரப்பிக்கொண்டும் இருந்தோம். திடீரென்று மணிகண்டனின் கத்தல்..... பயந்துபோய் அவனெ பாத்தா மரத்திலிருந்து கீழே புதரில் விழுந்து கிடந்தான். எனக்கு பயமும் பதட்டமும், தேவனை பார்த்தேன். அவனும் என்னை போலவே பதட்டத்தில். மணிகண்டான்னு குரல் கொடுத்தேன். அவன் புதரிலிருந்து சிரமப்பட்டு எழுந்து பக்கத்து மரத்தை பாக்க சொன்னான்.

திரும்பினால் அந்த மரத்தில் ஒரு மலைப்பாம்பு மெதுவாக நகர்ந்துக்கொண்டிருந்தது.

தேவன் அதற்குள் மரத்திலிருந்து இறங்கி்யிருந்தான். எனக்கு குதிப்பதற்கு பயம். கீழே விழுந்த மணிகண்டனும், தேவனும் பதட்டத்தில் என்னை அவசரப்படுத்துகிறார்கள். நானோ கை, கால் நடுங்க உதறல் எடுத்துக்கொண்டெ, குதிக்கலாமா, வேண்டாமான்னு.... பின்னெ .....நல்ல உயரம். முப்பது அடி இருக்கும்.

அப்புறம் என்ன... காலும், கையும் நடுங்க வேகவேகமாக இறங்கி, பாதியிலெயே புதருக்குள் குதித்து, கை, கால் எல்லாம் சிராய்ப்பு, ரத்தத்துடன் ஓட்டம்..... பத்து நிமிடம் ஓடியப்பின் மூச்சு வாங்க முன்னாலெ ஓடினவங்களெ பாத்தா, அவனுக கொஞ்ச தூரத்தில் இன்னொரு மரத்தில் ஏறிகிட்டு இருந்தானுக..... இந்த மணிகண்டன் விழுந்தும் கூட ஒண்ணுமே நடக்காதவன் போல மரம் ஏறுவதை பார்த்து அசந்துட்டேன்.

நான் மட்டும் விடுவேனா என்ன... ஓடிப்போய் தொத்திகிட்டேன்.

இளங்கன்று பயம் அறியாதுன்னு இதுக்குத்தான் சொன்னாங்களோ?

தொடரும்.

Monday, December 11, 2006

அழியாத கோலங்கள் - 1

அப்ப நான் ஆறாம் வகுப்பில் சேர்ந்த புதுசு. ஐந்தாம் வகுப்பு வரை கீழ் நிலை பள்ளி(எலிமெண்டரி ஸ்கூல்). பிறகு அந்த பள்ளிக்கு அடுத்து இருக்கும் உயர்நிலைப் பள்ளி ஒரு நாள் ஆறாம் வகுப்பில் ஆசிரியர் வராததால் நாங்க எல்லோரும் வழக்கம் போல கத்திக்கொண்டும் குறும்பு செய்துக்கொண்டும் இருந்தோம்.

பக்கத்து அறை எட்டாம் வகுப்பு. அங்கு ஆஙகில பாடம் நடந்துக்கொண்டிருந்தது. நடத்தியவர் தலைமை ஆசிரியர். நாங்கள் கத்தியது அவருக்கு மிகவும் கோபத்தை உண்டாக்கிவிட்டது. உடனே எங்கள் வகுப்புக்கு வந்து அனைவரையும் ஒரு பார்வை பார்த்தார். சாதாரணமாகவே அந்த தலைமை ஆசிரியர் மீது எல்லோருக்கும் பயமும் மரியாதையும் இருக்கும். அவரை பார்த்து நாங்களும் பயந்து அமைதியாகிவிட்டோம். அவர் ஒரு நிமிடம் யோசித்துவிட்டு எங்கள் அனைவரையும் எட்டாம் வகுப்பிற்கு போய் உட்கார சொன்னார்.

வகுப்புகள் கொஞ்சம் பெரிதாக இருப்பதால், பெஞ்சுகளில் வகுப்பு பையன்கள் இருக்க. நாங்கள் முன்னால் தரையில் அமர்ந்தோம். எல்லோரையும் அமைதியாக இருக்க சொல்லிவிட்டு பாடத்தை ஆரம்பித்தார். எங்களுக்கு அவர் என்ன சொல்கிறார் என்று ஒரு எழவும் புரியவில்லை. வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தோம்.

அவர் திடீரென மேஜைமீதிருந்த தனது சாவிக்கொத்தை எடுத்து எட்டாம் வகுப்பு மாணவர்களிடம் காட்டி "வாட் ஈஸ் திஸ்?" என்றார். யாரும் பதில் கூற வில்லை. இரண்டு மூணு பேரிடம் கேட்டார். எல்லோரும் திருதிருவென முழித்தார்கள். உடனே தரையில் உட்கார்ந்திருந்த எங்களைப் பார்த்து "வாட் ஈஸ் திஸ்? என்று கேட்க, நான் உடனே எப்பவும் போல முந்திரிக்கொட்டயாக எழுந்து "சார் திஸ் ஈஸ் சாவி!" என்றேனே பார்க்கலாம்.

வகுப்பறையில் ஓவென்ற சிரிப்பு....

அதற்கு பிறகு பள்ளி இறுதி வகுப்பு வரையும் அவர் என்னைப் பார்க்கும்போது புன்னகைப்பதும் எனக்கும் அந்த ஞாபகம் வருவதும் தவிர்க்க முடியாத விசயமாகிவிட்டது.

Wednesday, November 08, 2006

ஒரு மருத்துவமனை விஜயம்

நேற்று இரவு சுமார் பத்து மணி இருக்கும். சாப்பிட்டுவிட்டு ஒரு நடை போகலாம் என்று நானும் நண்பரும் கிளம்பினோம். வீட்டுக்கு அருகில் ஒரு கால்பந்தாட்ட மைதானம் இருக்கிறது. அங்கு யாரும் அதிகம் வருவதில்லை. அதனால் அடிக்கடி அங்கு போய் பேசிக்கொண்டே நடப்போம். ஒரு முப்பத்தைந்து நிமிடங்களுக்குப் பிறகு திரும்பி வீட்டுக்கு வரும் வழியில் உடம்பில் லேசான அரிப்பு! வீடு நெருங்க நெருங்க அரிப்பு அதிகமாகி உடல் முழுவதும் பரவி விட்டது. வீட்டில் குழந்தைகளை தூங்க வைத்துவிட்டு மனைவியும் அவரது தங்கையுடன் அருகிலிருக்கும் பூங்காவுக்கு நடை பழக போயிருந்தார்கள். நண்பர் அப்படியே வீட்டுக்கு போகிறேன் என்று சொல்லி போய்விட்டார். குழந்தைகள் வீட்டினுள் நல்ல தூக்கத்தில். வீட்டு சாவி கொண்டுப் போகாமல் போய்விட்டேன். மணி அடித்தும் தட்டியும் குளிர்சாதனம் இயங்கி கொண்டிருந்ததால் குழந்தைகளுக்கு கேட்கவில்லை. மிகவும் முடியாமல் வீட்டிற்கு வெளியே படிக்கட்டில் உட்கார்ந்தேன். ஆனாலும் எதுவும் குறைந்தபாடில்லை. தலைச் சுற்றல், அரிப்போ தாங்க முடியவில்லை. உட்காரவும் முடியவில்லை. மெதுவாக எழுந்து எதிர் வீட்டு நண்பரின் வீட்டுக்கதவை தட்டினேன். அவர் கதவை திறந்ததும் முடியாமல் விழுந்துவிட்டேன். எனக்கு சுய நினைவு போய்விட்டது. (இதற்கு மேல் அவர்கள் பின்னர் சொன்னது) அவர்களுக்கு பதட்டமும் பயமும் ஒரு சேர பற்றிக்கொண்டது. வீட்டில் வேறு யாரும் இல்லாததால் அவரும் அவர் மனைவியும் என்னை மிகவும் சிரமப்பட்டு சோபாவில் படுக்க வைத்திருக்கிறார்கள்.
அந்த அம்மா ஒரு செவிலித்தாய் (நர்ஸ்). உடனே நாடி துடிப்பு (பல்ஸ்), இரத்த அழுத்தம் பார்த்திருக்கிறார்கள். அவை எதுவுமே சரியாக இல்லை. துடிப்பு சுத்தமாக தெரியவில்லை. மிகவும் பயந்துவிட்டார்கள். எங்கள் வீட்டிலோ யாரும் இல்லை.

நண்பர் மிகவும் பயந்து போய் அருகிலிருந்த உணவகத்தில் சிலரை கூப்பிட்டிருக்கிறார். ஒரு சிலர் வந்து பார்த்து விட்டு தங்கள் வேலையை பார்க்க போய்விட்டார்கள். வண்டியில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்லலாம் என்று நினைத்த அவருக்கு யாரும் உதவ அந்த சமயத்தில் கிடடக்கவில்லை. பிறகு மேல் வீட்டு நண்பரை கூப்பிட்டிருக்கிறார். அவர் உடனே வந்து எனது தம்பிகளை தொலைபேசி மூலம் அழைத்திருக்கிறார். எல்லோரும் பதட்டத்துடன் வந்திருக்கிறார்கள். மனைவியும் வந்துவிட்டாள். இப்பொழுது அந்த செவிலி எனது முகத்தில் தண்ணீர் தெளித்திருக்கிறார்கள். லேசாக நினைவு திரும்பியது. மனைவி ஒரே அழுகை. எனக்கு சிறிதளவு நினைவு வர தொடங்கியிருந்தது. அந்த செவிலி மறுபடியும் சோதனை செய்தார்கள். இப்பொழுது எல்லாமெ ஓரளவுக்கு சரியான நிலைக்கு திரும்பியிருந்தது.

எல்லோரும் மருத்துவமனைக்கு உடனே போகலாம் என்றார்கள். நான் வேண்டாம் சரியாகிவிடும் என்றேன். ஆனால் எதிர் வீட்டு நண்பரும், அண்ணி, தம்பிகளும் கட்டாயப்படுத்தி கூட்டிக்கோண்டு போனார்கள்.

இங்குள்ள மருத்துவமனைகளில் இரவு நேரத்தில்தான் கூட்டம் அதிகமாக இருக்கும். நண்பருக்கு ஏற்கனவே அனுபவம் இருக்கும் போல. தள்ளு நாற்காலியை கூப்பிடுங்கள், அப்பொழுது தான் வேகமாக மருத்துவரை பார்க்க முடியும் என்றார். அதன்படியே தள்ளு நாற்காலியும் வந்தது. அதில் என்னை உட்கார வைத்து பின்னர் பதிவு செய்து மருத்துவரின் அறைக்கு கொண்டு சென்றார்கள். அங்கு ஏராளமான நோயாளிகள் அமர்ந்திருந்தார்கள். நான் தள்ளு நாற்காலியில் இருந்ததால் ஒரு பத்து நிமிட காத்திருத்தலுக்கு பிறகு மருத்தவரை காண வாய்ப்பு கிடைத்தது. மருத்துவர் நண்பரிடமும், மனைவியிடமும் விசாரித்து விட்டு மருத்துவ காகிததில் ஏதோ எழுதிக்கொடுத்து வேறு ஒரு அறைக்கு அனுப்பினார். அங்கு மீண்டும் இரத்த அழுத்தம், நெஞ்சு வலி, மாரடைப்புக்கான சோதனைகள் செய்தார்கள். அந்த சோதனை அறிக்கையை மருத்துவரிடம் கொண்டு சென்றோம். அவர் அதை பார்த்து விட்டு வேறு ஒரு அறைக்கு கண்காணிப்பிற்காக (observation) அனுப்பினார். அங்கிருந்த அத்தனை படுக்கைகளும் நிரம்பியிருந்தன. ஒரு இருபது நிமிடங்கள் கழித்து ஒரு படுக்கை காலியானது அதில் என்னை படுக்க வைத்து சத்து நீர் (குளுகோஸ்) ஏற்ற தொடங்கினார்கள். பரிசோதனைக்காக இரத்தமும் எடுத்தார்கள். குளிர் சாதன அறையாக இருந்ததால் மிகவும் குளிர்ந்தது. ஒரு போர்வையை கேட்டு வாங்கி போர்த்தினாள் மனைவி. எனக்கு நேர் மேலே குளிர்சாதனத்தின் சிறு சன்னல் இருந்ததால் நான் முகத்தையும் மூடினேன். உடனே என் மனைவி பயந்துவிட்டாள். எனக்கு பயங்கரமான களைப்பில் தூக்கம் கண்ணை சொக்கவைத்தது. பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை என் மனைவி என்னை கூப்பிட ஆரம்பித்தாள். ரொம்பவும் பயந்துவிட்டாள். கொஞ்ச நேரம் சும்மாயிரு, தூங்குகிறேன் என்று அதட்டியதும் பயத்துடன் அமைதியாகிவிட்டாள். வேறு சில நண்பர்களும் வந்திருந்ததால், அடுத்த நாள் வேலையின் காரணமாக எதிர்வீட்டு நண்பரை கட்டாயப்படுத்தி வீட்டுக்கு அனுப்பியிருக்கிறார்கள். அவர் போக விருப்பமேயில்லாமல் போய் இருக்கிறார்.

சுமார் மூன்று மணிநேரம் கழித்து எல்லா சோதனைகளும் முடிந்து பார்த்த மருத்துவர் எல்லாம் சரியாக இருக்கிறது. ஒன்றும் பயப்பட தேவையில்லை. ஏதோ ஒரு ஒவ்வாமை (அலர்ஜி) என்று சொல்லி மாத்திரைகள் கொடுத்தார். பிறகு நண்பரின் வண்டியில் எல்லோரும் வீட்டுக்கு திரும்பினோம். மணி இரவு மூன்று மணிக்கு மேல் ஆகிவிட்டது. எதிர் வீட்டு நண்பர் அவ்வளவாக பழக்கம் இல்லாமல் இருந்தாலும் அவசரத்தில் மிகவும் உதவியதை மறக்க முடியவில்லை. மேல்வீட்டு நண்பரும் தக்க சமயத்தில் வந்து உதவினார். பின்னர் வந்த நண்பர்களும் தூங்காமல், சாப்பிடாமல் திரும்ப வீடு வரும் வரை பொறுமையாக இருந்தது மனதை ஏதோ செய்தது.

காலையில் தான் குழந்தைகளுக்கு சொன்னேன். ஒரே அழுகை.

மிகவும் களைப்பாக இருந்ததால் அலுவலகத்திற்கு விடுமுறைக்கு சொல்லிவிட்டு வீட்டில் ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கிறேன்.


மனிதநேயம் இன்னும் அழிந்துவிடவில்லை என்பதற்கு எனக்கு நடந்த இந்த நிகழ்ச்சி ஒரு சின்ன உதாரணம்.

Monday, September 11, 2006

காதல் - சில கேள்விகள்

  1. ஏன் பல பேரின் காதல் கல்யாணத்திற்கு பிறகு சில காலம் கழித்து கசந்து விடுகிறது?
  2. ஏன் காதல் கல்யாணத்தில் தான் முடிய வேண்டும்?
  3. ஏன் காதல் தோல்விகள் ஏற்படுகின்றன?
  4. ஏன் காதல் ஒரு குறிப்பிட்ட வயதில் அதிகமாக (90%) வருகிறது?
  5. ஏன் காதல் இல்லையேல் சாதல் என பலர் தங்கள் வாழ்வை அழித்துக்கொள்கிறார்கள்?
  6. ஏன் சிலர் முதல் காதல் தோல்வியடைந்தால் அடுத்த காதலை நோக்கி ஓடுகிறார்கள்?
  7. ஏன் காதல் கண்ணை மறைக்கிறது?
  8. ஏன் பொதுவில் பெற்றோர்கள் காதலை வெறுக்கிறார்கள்?
  9. ஏன் காதல்கள் பொதுவாக கல்லூரிகளில் உருவாகிறது?
  10. காதலுக்கும் நட்புக்கும் உள்ள முக்கிய வித்தியாசங்கள் என்ன?
  11. நட்பு காதலாக மாறலாம் ஆனால் காதல் நட்பாக மாறுமா?
  12. காதலைப் பற்றி எழுதும் போது மட்டும்தங்களின் புலம்பல்கள் எல்லாம் கவிதைகள் என்று சிலர் ஏன் மற்றவர்களை சாகடிக்கிறார்கள்?

இந்த கேள்விகளுக்கு பதில் சரியாக தெரிந்தும் சொல்லாமலோ, அல்லது தவறான பதில்கள் சொன்னாலோ, அல்லது மழுப்பினாலோ உங்கள் தலை......

Sunday, September 10, 2006

இந்தியனின் மூளை

நியூயார்க் நகரில் இருக்கும் அந்த புகழ் பெற்ற வங்கிக்குள் நுழைந்த அந்த இந்தியர் அங்கிருந்த அதிகாரியிடம் தனக்கு 5000 டாலர்கள் கடன் வேண்டும் என்றும் தான் இந்தியாவிற்கு இரண்டு வாரப் பயணமாக செல்வதாகவும் திரும்பிவந்து கடன் பணத்தைக் கட்டிவிடுவதாகவும் சொன்னார்.

அதற்கு அந்த அதிகாரி, உங்களுக்கு கடன் கொடுக்கவேண்டுமெனில் நீங்கள் அதற்காக ஏதாவது உத்தரவாதம் கொடுக்கவேண்டும் என்றார். இதைக் கேட்ட அந்த இந்தியர் வங்கிக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த தனது புத்தம்புதிய ஃபெராரி கார் சாவியை அந்த அதிகாரியிடம் கொடுத்தார். கூடவே காரின் உரிமைப் பத்திரங்களையும் கொடுத்தார். வங்கி அதிகாரி திருப்தியுடன் அந்த இந்தியருக்கு அவர் கேட்ட கடனை கொடுத்தார்.

250,000 டாலர் மதிப்புள்ள ஃபெராரி காரை வெறும் 5000 டாலர் கடன் வாங்க பயன்படுத்திய அந்த இந்தியரை நினைத்து வங்கியின் தலைவரும் மற்ற அதிகாரிகளும் அனுபவித்து சிரித்தனர். பிறகு வங்கியின் ஊழியர் ஒருவர் அந்தக் காரை வங்கியின் கீழ்தளத்தில் உள்ள கார்கள் நிறுத்துமிடத்திற்கு கொண்டு சென்று நிறுத்தினார்.

இரண்டு வாரங்கள் கழித்து திரும்பி வந்த இந்தியர் அந்த வங்கிக்கு சென்று தான் வாங்கிய 5000 டாலரையும் அதற்கான வட்டியாக 5.41 டாலரயும் திருப்பிக்கொடுத்தார். அவருக்கு கடன் கொடுத்த அந்த வங்கி அதிகாரி, "சார், உங்களுடன் வியாபாரம் செய்ததில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. நமது பரிவர்த்தனை மிக நல்ல முறையில் நடந்தது. ஆனா ஒரே ஒரு விசயம்தான் எங்களுக்கு இன்னும் புரியலெ, நீங்க போன பிறகு உங்களைப் பத்தி நாங்க விசாரிச்சோம். நீங்க ஒரு பெரிய கோடீஸ்வரர் என்று தெரிந்தது. இவ்வளவும் பெரிய பணக்காரர் கேவலம் 5000 டாலர் கடன் வாங்குகிறாரே என்று எங்களுக்கு ஒரே குழப்பம்" என்றார்.

அதற்கு அந்த இந்தியர், "எனக்கு நியூயார்க் நகரத்தில் கார் நிறுத்தும் வசதி இல்லை. பிறகு எங்கு கொண்டுப்போய் நான் எனது காரை இவ்வளவு குறைந்த 15.41 டாலர் கட்டணத்திற்கு அதுவும் நான் திரும்பி வரும் வரை யாரும் திருடிக்கொண்டுப் போகாமல் பாதுகாப்பாக நிறுத்த முடியும்" என்றார்.

ஆம். இது தான் இந்தியனின் மூளை.

இதனால் தான் இந்தியா ஒளிர்கிறது.

Wednesday, July 05, 2006

விசா

இந்தியாவில் நஸ்டத்தில் இயங்கிக்கொண்டிருந்த அந்த மிருகக்காட்சி சாலையில் இருந்த சிங்கத்திற்கு ஒரு நாளுக்கு ஒரு கிலோ இறைச்சி மட்டும்தான் கிடைத்து வந்ததால் அது மிகவும் நொந்துபோய் இருந்தது.
ஒரு நாள் அங்கு வந்த அமெரிக்காவிலிருக்கும் ஒரு மிருகக் காட்சி சாலையின் மேலாளர் அந்த சிங்கத்தை அமெரிக்காவிற்கு அனுப்பும்படி நிர்வாகத்திடம் சொன்னபோது அந்த சிங்கம் ஓ எனது பிரார்த்தனை பலித்துவிட்டது என்று மகிழ்ச்சி அடைந்தது.

அமெரிக்காவுக்கு சென்றுவிட்டால் அருமையான குளிர் சாதனம் பொருத்தப்பட்டட அறையில் தங்கலாம், தினமும் ஒரு முழு ஆடு அல்லது இரண்டு ஆடுகள் கூட சாப்பிட கிடைக்கும். அதுவும் அல்லாது அமெரிக்காவிற்கான பச்சை அட்டையும் (கிரீன் கார்ட்) கிடைக்கும் என்று கணக்குப் போட்டது.

அமெரிக்காவுக்கு போய் சேர்ந்த முதல் நாள்அந்த சிங்கத்திற்கு காலையில் அருமையாக கட்டப்பட்ட ஒரு பெட்டியில் உணவு வந்தது.

சிங்கம் ஆவலுடன் வேக வேகமாக அந்த பெட்டியைத் திறந்துப் பார்த்து அதில் சில வாழைப்பழங்கள் மட்டும் இருந்தது கண்டு ஏமாற்றம் அடைந்தது.
ஓ நான் இப்பத்தான் இந்தியாவிலிருந்து வந்திருக்கேன், அதனாலெ என்னெ நல்லா கவனிக்கணும்ங்கற எண்ணத்திலெ எனக்கு ஏதாவது வயிறு கோளாறு வரக்கூடாது அப்படீன்னு நினைச்சி வாழைப்பழம் கொடுத்திருக்காங்க போலிருக்கு என்று நினைத்தது.

அடுத்த நாளும் முதல் நாள் போலவே நடந்தது. மூன்றாவது நாளும் அதே வாழைப்பழப் பெட்டி வந்ததும் அந்த சிங்கத்தினால் தாங்க முடியவில்லை.

பெட்டியை கொண்டுவந்த பையனை தடுத்து நிறுத்தி கோபமாக உனக்கு தெரியாதா, நான் சிங்கம்னு, காட்டுக்கே ராஜா! உங்க நிர்வாகம் என்ன நினைச்சிகிட்டு இருக்காங்க, கொஞ்சம் கூட அறிவில்லாமெ இருக்காங்க? எனக்கு எதுக்கு வாழைப்பழத்தை தினமும் கொண்டுவர்றே? என்று கேட்டது.

அந்தப் பையன் மிகவும் பணிவாக, ஐயா, எனக்கு தெரியும் நீங்க காட்டுக்கே ராஜாங்கறது. ஆனா நீங்க இங்கே வந்திருக்கறது குரங்குக்கான விசாவில் என்றான்.

வெளிநாட்டில் குரங்காக இருப்பதைவிட இந்தியாவில் சிங்கமாக இருக்கலாம்.


நன்றி: வினோத்

Friday, June 23, 2006

சந்தைப் படுத்துதல் என்றால் என்ன?

ஒரு விருந்தில் அழகான ஒரு பெண்ணைப் பார்க்கிறீர்கள். உடனே அவளிடம் சென்று நான் பெரிய பணக்காரன். என்னை கல்யாணம் செய்துக் கொள்கிறாயா என்று கேட்பது நேரடியாக சந்தைப்படுத்துதல்.(Direct Marketing)

நீங்கள் ஒரு விருந்தில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கிருக்கும்போது ஒரு அழகான பெண்ணைப் பார்க்கிறீர்கள். உங்கள் நண்பர்களில் ஒருவர் அவளிடம் சென்று உங்களை காண்பித்து அவர் மிகப்பெரிய பணக்காரர். அவரை திருமணம் செய்துகொள் என்று சொல்வது விளம்பரம் (Advertisement)

நீங்கள் ஒரு விருந்தில் ஒரு அழகான பெண்ணைப் பார்த்தவுடன் உங்கள் உடையை ஒரு முறைப் பார்த்து, கழுத்துப் பட்டையை (Tie) நேராக்கி, தலையை ஒரு முறை தொட்டுப் பார்த்துவிட்டு பிறகு அவளிடம் சென்று வணக்கம் சொல்லி அவளுக்கு குளிர் பானம் ஊற்றி கொடுத்து, அவள் செல்கையில் வாசல் கதவை அவளுக்காக திறந்து வைத்து, அந்த நேரத்தில் அவளுடைய கைப்பை தவறுதலாக கீழேவிழும் போது (பொதுவாக இது நடக்கும்) அதை அவளுக்கு எடுத்து கொடுத்து, அவளை வீட்டில் கொண்டு விடவா என்று பணிவுடன் கேட்டப்பின் மெதுவாக அவளிடம் நான் ஒரு செல்வந்தன், என்னை திருமணம் செய்துக் கொள்கிறாயா என்று அவளிடம் கேட்பது
பொதுஜன தொடர்பு (Public Relations)

நீங்கள் ஒரு விருந்தில் இருக்கும்பொழுது ஒரு அழகானப் பெண் உங்களிடம் வந்து நீங்கள் மிகப் பெரிய பணக்காரர், உங்களைப் பற்றி நான் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். நான் உங்களை திருமணம் செய்துக்கொள்ள விரும்புகிறேன் என்று சொல்வது உங்கள் தயாரிப்பு சந்தையில் அங்கீகரிக்கப்பட்டுவிட்டது என்பதாகும் (Brand Recognition).

நீங்கள் ஒரு விருந்தில் அழகான ஒரு பெண்ணைப் பார்க்கிறீர்கள். உடனே அவளிடம் சென்று, நான் பணக்காரன், என்னை திருமணம் செய்து கொளகிறாயா என்று கேட்கிறீர்கள். அவள் உடனே உங்கள் கன்னத்தில் பட்டென்று ஒரு அறை கொடுப்பாள். இதற்கு பெயர் உங்கள் தயாரிப்பைப் பற்றிய வாடிக்கையாளரின் அபிப்ராயம். (Customer's Feedback)


உங்களுடைய அபிப்ராயங்களும் வரவேற்கப்படுகின்றன.

Monday, May 29, 2006

2006ஆம் ஆண்டில் வாழ்ந்துக்கொண்டிருக்கும் நீங்கள்

2006ஆம் ஆண்டில் வாழ்ந்துக்கொண்டிருக்கும் நீங்கள்

1.தெரியாத்தனமாக உங்களது கடவு சொல்லை (பாஸ்வோர்ட்) மைக்ரோவேவில் தட்டச்சுவீர்கள்

2. ஸொலிட்டையர் (சீட்டு விளையாட்டு) ஆட்டத்தை உண்மையான சீட்டுக்கட்டை வைத்து விளையாடி பல வருடங்களாகியிருக்கும், அல்லது விளையாடியே இருக்க மாட்டீர்கள்.

3. மூன்று பேருள்ள உங்கள் குடும்பத்தை தொடர்பு கொள்ள குறைந்தபட்சம் பதினைந்து தொலைபேசி எண்களை வைத்திருப்பீர்கள்.

4. உங்களுக்கு அடுத்த இருக்கையில் பணி செய்து கொண்டிருக்கும் நண்பருக்கு மின்மடல் (இமெயில் ) அனுப்புவீர்கள்.

5. உறவினர்களுடனும், நண்பர்களுடனும் அடிக்கடி உங்களால் தொடர்புகொள்ள முடியாததற்கு காரணம் அவர்களுக்கு மின் முகவரி (இமெயில் அட்ரஸ்) இல்லெயென்று சொல்வீர்கள்.

6. வீட்டிற்கு வண்டியில் போகும்போது அலைபேசியில் வீட்டை கூப்பிட்டு நீங்கள் வாங்கிகொண்டு போகும் சாமன்களை வீட்டிற்குள் கொண்டு செல்ல உதவிக்கு ஆள் அனுப்ப சொல்வீர்கள்.

7. தொலைக்காட்சியில் வரும் எல்லா விளம்பரங்களுக்கு கீழ் அந்த நிறுவனத்தின் இணைய முகவரி இருக்கும்.

8. வீட்டை விட்டு வெளியில் போகும் போது அலைபேசியை மறந்து வைத்துவிட்டு வந்திருந்தால் மிகவும் கலவரமடைந்து, உடனே போய் அதை எடுத்து வருவீர்கள் (உங்கள் வாழ்க்கையில் முதல் 20 அல்லது முப்பது வருடங்களாக ஏன் 60 வருடங்களுக்கும் மேல் அலைபேசி என்ற ஒரு கருவியே இருந்திருக்காது என்பது வேறு விசயம்)

10. காலையில் எழுந்து காப்பி குடிப்பதற்கு முன் ஆன்லைனுக்கு போய்விடுவீர்கள்

11. நீங்கள் இதை படித்து தலையை குலுக்கிக்கொண்டு சிரிப்பீர்கள்

12. அதெ விட மோசம், இதை யார் யாருக்கு அனுப்பணும்னு சரியா முடிவு செய்திருப்பீர்கள்

13. நீங்க ரொம்ப பிஸியா இருக்கறதனாலெ இங்கெ #9 இல்லேங்கறதெ கவனித்திருக்க மாட்டீர்கள்.

14. இப்பொழுது நீங்கள் திரும்பவும் மேலே போய் #9 இருக்கா இல்லையான்னு சோதித்துப் பார்ப்பீர்கள்.

15. இப்ப உங்களெ பாத்து நீங்களே சிரிப்பீங்க

போங்க, இதெ உங்க நண்பர்களுக்கு அனுப்புங்க.

அதெ தானெ இப்ப செய்ய போறீங்க!

நன்றி: நிலா

Thursday, May 25, 2006

மதுமிதாவுக்கு எனது குறிப்புகள

வலைப்பதிவர் பெயர்: மஞ்சூர் ராசா

வலைப்பூ பெயர் : மஞ்சூர் ராசாவின் பக்கங்கள்

சுட்டி(url) : http://manjoorraja.blogspot.com/

ஊர்: மஞ்சூர், இந்தியா

நாடு: தற்போது வசிப்பது குவைத்

வலைப்பூ அறிமுகம் செய்தவர்: நானே, தமிழ் மணமும் காரணம்

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : ஜூன் 1, 2005

இது எத்தனையாவது பதிவு: 23

இப்பதிவின் சுட்டி(url):
http://manjoorraja.blogspot.com/2006/05/blog-post_25.html

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: குழுமங்களில் எழுதி வந்தாலும் பல வலைப்பூக்களை தொடர்ந்து படித்தப் பொழுது ஏன் நாமும் ஒரு வலைப்பூவைத் தொடங்கக்கூடாது என்ற எண்ணத்தினால் உதித்ததுதான். தற்போது அதிகமாக எழுதுவது முத்தமிழ் மற்றும் நம்பிக்கை கூகிள் குழுமங்களில்.
http://groups.google.com/group/muththamiz
http://groups.google.com/group/nambikkai


சந்தித்த அனுபவங்கள்: பெரிதாக ஒன்றும் இல்லை

பெற்ற நண்பர்கள்: ஏராளம்.

கற்றவை: கற்றுக்கொண்டே இருக்கிறேன்

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: முழு சுதந்திரம்

இனி செய்ய நினைப்பவை: அனைவராலும் விரும்பும் வண்ணம் எழுத

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: என்னைப் பற்றி சொல்ல பெரிதாக எதுவுமில்லை. நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் பிறந்தேன். இந்தியாவில் பல இடங்களில் சுற்றிவிட்டு இப்பொழுது குவைத்தில் தற்காலிகமாக வசித்து வருகிறேன்.

இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்: வலைப்பதிவாளர்கள் தங்கள் பதிவுகளை பலரும் படிக்கிறார்கள் என்பதை மனதில் கொண்டு, நாம் அனைவரும் தமிழர்கள் என்ற ஒரே எண்ணத்தில் எழுதினால் நல்லது. அதுமட்டுமல்லாது தங்கள் எழுத்திலும் யார் மனதும் புண்படாத வண்ணம் எழுதவேண்டும்.

Wednesday, May 10, 2006

ஒரு எளிமையான கதை அதே சமயத்தில் ஆழமான சிந்தனை

தற்போது நல்ல நிலையிலிருக்கும் சில மூத்த மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து தாங்கள் படித்தப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியரை சந்திக்க சென்றனர். சந்திப்பின் போது சுவாரஸ்யமாக சென்றுக்கொண்டிருந்த உரையாடல் திடீரென்று வேலை மற்றும் வாழ்க்கையில் ஏற்படும் மன அழுத்தம் பற்றிய விவாதமாக மாறியது.

வந்தவர்களுக்கு காபி கொடுக்க சமையலறைக்கு சென்ற பேராசிரியர் திரும்ப வரும்போது ஒரு பெரிய கூஜாவில் காப்பியையும் பலவிதமான கோப்பைகளையும் எடுத்து வந்தார். அவை பீங்கான், பிளாஸ்டிக், வெள்ளி, எவர்சில்வர், கண்ணாடி கோப்பையென சில விலை உயர்ந்தவைகளாகவும், வேலைப்பாடுகளுடனும் சில சாதாரணமாகவும் பலவிதங்களில் இருந்தன. பேரசிரியர் அவற்றை மேஜை மீது வைத்துவிட்டு, எல்லோரையும் சூடான காப்பியை தாங்களாகவே ஊற்றி குடிக்க சொன்னார்.

எல்லோரும் ஆளுக்கொரு கோப்பையில் காப்பியை ஊற்றி அருந்த தொடங்கும்போது பேராசிரியர் சொன்னார், நண்பர்களே கவனியுங்கள்
"நீங்க எல்லோரும் விலை உயர்ந்த, அழகான கோப்பைகளில் காப்பியை எடுத்திருக்கிறீர்கள். மேஜையில் மீதி இருப்பது மிக சாதாரணமான, விலை மதிப்பற்ற கோப்பைகள். உங்கள் அனைவருக்கும் மிகச் சிறந்த பொருட்கள்தான் தேவைப்படுகின்றன. அதைத்தான் எதிர்ப்பார்க்கிறீர்கள். அது தான் உங்கள் பிரச்சினனகளுக்கும் மன அழுத்தத்திற்கும் காரணம்."

"உண்மையில் நம் அனைவருக்கும் வேண்டியது காப்பி, கோப்பையல்ல. ஆனால் நீங்கள் எல்லோரும் நல்ல விலையுயர்ந்த கோப்பையை தான் எடுக்க முயற்சித்தீர்கள், மேலும் அடுத்தவர் எப்படிப்பட்ட கோப்பையை எடுத்திருக்கிறார் என்பதையும் நோட்டமிட்டீர்கள்."

"இப்பொழுது வாழ்க்கை என்பதை காப்பி என்று வைத்துக்கொண்டால் வேலை, பணம், சமூகத்தில் நமக்குள்ள பொறுப்பு, அந்தஸ்து ஆகியவை கோப்பைகள். இவையெல்லாம் வாழ்க்கையை வாழ்வதற்காக நம்மால் பயன்படுத்தப்படும் கருவிகள். இவற்றால் எல்லாம் வாழ்க்கையின் தரம் மாறாது."

"பொதுவாக நாம் கோப்பையின் மீதே கவனம் வைப்பதால் காப்பியின் சுவையை அனுபவிக்காமல் போய்விடுகிறோம்."

"ஆகவே நண்பர்களே கோப்பையில் உங்கள் கவனத்தை சிதறவிடாமல் காப்பியின் சுவையை அனுபவியுங்கள்."

நன்றி: Kanthi

Wednesday, April 19, 2006

"நம்பிக்கை முதலாம் ஆண்டு விழா" போட்டி அறிவிப்பு

நம்பிக்கை குழுமத்தின் முதலாம் ஆண்டு விழா
கவிதை மற்றும் கட்டுரை போட்டிஅறிவிப்பு மடல்
இணையத்தின் இனிய நண்பர்களே! சக குழும நண்பர்களே வணக்கம்!உங்கள் அன்பினால் பிறந்த இந்த "நம்பிக்கை" குழந்தை தனது முதலாம் ஆண்டுவிழாவினை ஏப்ரல் 23, 2006 - ல் கொண்டாடுகிறது. அதை சிறப்பிக்கும் விதத்தில் நம்பிக்கை நண்பர்களின் வேண்டுகோளின் படி இணையத்தில் கவிதை மற்றும் கட்டுரை போட்டியை நடத்தி சிறந்த ஆறு படைப்புகளை தேர்ந்தெடுத்து அவற்றிற்கு புத்தகப் பரிசு வழங்கலாம் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
போட்டியில் கலந்து கொள்ளத் தகுதி:1. இணையத் தமிழில் ஈடுபாடு உள்ளவர்கள் எவராகினும் இருக்கலாம்.2. நம்பிக்கையின் உறுப்பினராக இருக்கவேண்டும் என்ற கட்டுப்பாடு கிடையாது.3. வலைப்பூ நண்பர்கள் பெரிதும் வரவேற்கப் படுகின்றனர்.
போட்டி விதி முறை:
கவிதை !1. மனிதனுக்கு நம்பிக்கையை விதைக்கும் (அ) சமூக பார்வை கொண்ட கவிதையாய் இருத்தல் வேண்டும்! (தலைப்பு உங்கள் விருப்பப்படி வைக்கலாம்)2. கவிதை வரிகளுக்கு கட்டுப்பாடு இல்லை. எத்தனை வரிகள் வேண்டுமானாலும் இருக்கலாம்! மரபுக்கவிதை (அ) புதுக்கவிதையாகவும் இருக்கலாம்.3. ஏற்கனவே இணையத்திலோ மற்ற ஊடகங்களிலோ வெளி வந்த படைப்பாய் இருத்தல் கூடாது!4. யுனித்தமிழில் படைப்பை அனுப்பினால் மிக்க மகிழ்ச்சி!
கட்டுரை !1. மனிதனுக்கு நம்பிக்கையை விதைக்கும் சமூக பார்வை கொண்ட கட்டுரையாய், மறுமலர்ச்சியை உண்டு பண்ணும் கட்டுரையாய் இருத்தல் வேண்டும்!2. குறைந்தபட்சம் ஒருபக்கம் அளவில் இருக்க வேண்டும். மற்றபடி கட்டுப்பாடு இல்லை.3. ஏற்கனவே இணையத்திலோ மற்ற ஊடகங்களிலோ வெளி வந்த படைப்பாய் இருத்தல் கூடாது!4. யுனித்தமிழில் படைப்பை அனுப்பினால் மிக்க மகிழ்ச்சி!
படைப்பை அனுப்ப கடைசி நாள்14 - 05 - 2006 (ஞாயிறு) இந்திய நேரம் இரவு 7.00 மணிக்குள்
தேர்வு குழுபடைப்பை தேர்ந்து எடுப்பவர்கள் முனைவர் பட்டம் பெற்ற மொழி வல்லுநர்கள், பேராசிரியர்கள், சமுதாய ஆர்வலர்கள் மற்றும் ஆன்மீகச் செம்மல்கள்.
உங்கள் படைப்புகள் தேர்வு குழுவுக்கு அனுப்பப் பட்டு தேர்ந்தெடுக்கப் படும்.முதலாம் இடம், இரண்டாம் இடம் என்று வகைப்படுத்தப் போவதில்லை.கவிதை மற்றும் கட்டுரைகளில் இருந்து சிறந்த மூன்று, மூன்று படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு அவற்றிற்கு பரிசளிக்கப் படும்.
அனுப்பப்படும் படைப்புகளை நம்பிக்கை குழுமத்திலோ, நம்பிக்கை வலைப்பூவிலோ பிரசுரிக்க உங்கள் அனுமதியை இப்போதே பெற்றுக் கொள்கிறோம்.
தேர்வு செய்யப்பட்ட படைப்புகள் பற்றிய விபரம் மே மாத இறுதியில் அறிவிக்கப்படும்.
படைப்பை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:1.பரஞ்சோதி paransothi@gmail.com2.உமாநாத்(எ) விழியன் umanaths@gmail.com3.பாஸிடிவ்ராமா positiverama@gmail.com
இந்த 3 மின்னஞ்சலுக்கும் அனுப்பி வையுங்கள்.
மேலதிக விளக்கம் வேண்டுமெனில் எங்களை தொடர்பு கொள்க!
முக்கியக் குறிப்பு :தேர்தெடுக்கப்படும் கவிதைகள், கட்டுரைகள் சும்மா பொழுது போக்கிற்காக அன்று , சில நல்ல நோக்கங்களுக்காக பயன்படுத்தப் படவும் உள்ளது என்பதை நம்பிக்கை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறது.
உலகத் தமிழர்களே ! ஒன்று கூடுங்கள் நம்மவர் மனதில் நம்பிக்கையை விதையுங்கள்! அனைவரும் போட்டியில் பங்கு பெற ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
இவண்,நம்பிக்கை நண்பர்கள்கூகுள் குழுமம்.http://groups-beta.google.com/group/nambikkai/

Wednesday, April 12, 2006

மாணவர்கள் ஏன் தேர்வில் தோல்வி அடைகிறார்கள்?

இன்று காலை நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கும்பொழுது அவர் சொன்னார், மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைவதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். ஆனால் முக்கியமான சில விசயங்களை மறந்து விடுகிறார்கள் என்றார். அதென்ன முக்கியமான விசயங்கள் என்று நான் கேட்டதற்கு அவர் சொன்ன பதில்:

ஒரு மாணவனோ அல்லது மாணவியோ தேர்வில் தோல்வி அடைவதற்கு அவர்களை குற்றம் சொல்லி எந்த புண்ணியமும் இல்லை.

ஏனென்றால் ஒரு வருடத்திற்கு 365 நாட்கள்

சராசரியாக ஒரு மாணவனின் கல்வியாண்டில்:

52 ஞாயிற்று கிழமைகள் விடுமுறை. மீதி இருப்பது 313 நாட்கள்.

கோடைவிடுமுறை 50 நாட்கள். இந்த சமயத்தில் வெயில் அதிகமாக இருப்பதன் காரணமாக சரியாக படிக்க முடியாது. மீதி 263 நாட்கள்.

ஒரு நாளுக்கு சராசரியாக எட்டு மணி நேரம் தூங்கினால் அதில் 122 நாட்கள் போய்விடும். மீதி 141 நாட்கள்.

உடல் ஆரோக்கியத்திற்காக தினம் ஒரு மணி நேரம் விளையாட்டில் கழித்தால் அதில் ஒரு 15 நாட்கள் போய்விடும். மீதி 126 நாட்கள்.

சாப்பாடு, மற்றும் கொறித்தல் பொன்றவைகளுக்கு ஒரு நாளில் இரண்டு மணி நேரம் அதில் ஒரு 30 நாட்கள். மீதி இருப்பது 96 நாட்கள்.

குறைந்த அளவு என்றாலும் தினம் ஒரு மணி நேரமாவது பேசுகிறோம் (பெண்கள் இன்னும் கொஞ்சம் அதிகம்). இதில் 15 நாட்கள். மீதி 81 நாட்கள்.

ஒரு வருடத்தில் பல வித பரீட்சைகளுக்காக சுமார் 35 நாட்கள் போய்விடும். மீதி 46 நாட்கள்.

காலாண்டு, அறையாண்டு, பண்டிகை போன்றவற்றுக்காக விடுமுறை 40 நாட்கள். மீதி இருப்பதோ ஆறு நாட்கள்.

எப்படியும் உடல்நல குறைவு ஏற்படுவதால் வருடத்திற்கு குறைந்தது மூன்று நாட்கள் அதில் போய்விடும்.மீதி இருப்பது மூன்று நாட்கள். ஏதாவது முக்கிய நிகழ்ச்சிக்கோ, அல்லது சினிமாவுக்கோ மிக மிக குறைந்த அளவென்றாலும் இரண்டு நாட்கள் அதில் போய்விடும்.

இப்பொழுது இருப்பதோ ஒரே ஒரு நாள்.

அந்த ஒரு நாள் அவர்களின் பிறந்த நாள்.

பிறகு எப்படித்தான் தேர்வில் வெற்றிப்பெற முடியும்?



பின்குறிப்பு: இந்த செய்தி ஏற்கனவே உங்களுக்கு தெரிந்திருந்தால், அதற்கு நான் பொறுப்பல்ல.

Monday, April 10, 2006

வாழ்க்கைக்கான இனிய பாடம்

ஒரு மாணவன் ஆசிரியரை பார்த்து கேட்டான்: "காதல் என்றால் என்ன?"

ஆசிரியர் சொன்னார் உனது கேள்விக்கு பதில் சொல்லவேண்டுமென்றால் நீ வயலுக்கு போய் ஒரு மிகப் பெரிய கதிரை அறுத்துக்கொண்டு வா என்றார்.
ஆனால் ஒரு நிபந்தனை: நீ ஒரே தடவையில் இந்த வேலையை முடிக்க வேண்டும். திரும்பவும் செய்யக்கூடாது.

மாணவன் வயலுக்கு சென்று முதல் வரிசையில் பார்த்தான் அங்கே ஒரு நீளமான பெரிய கதிர் ஒன்றைக் கண்டான். உடனே நினைத்தான் இதைவிட பெரிதாக வேறு கதிர் இருந்துவிட்டால். ஓ அங்கே இன்னொன்று பெரிதாக இருக்கிறதே!, அதோ இன்னொன்று அதை விட பெரிதாக….

ரொம்ப நேரம் கழித்து பாதி வயலை சுற்றிய பிறகும் அவனால் எந்த கதிர் பெரிய கதிர் என்று நிச்சயிக்க முடியவில்லை. முதலில் பெரிதாக தெரிந்தது பின்னர் வேறொன்றை பார்க்கும்போது சிறிதாக தெரிந்தது. அவன் மிகவும் வருத்தமுற்றான். அவனால் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. வெறுங்கையுடன் வகுப்புக்கு திரும்பினான்.

ஆசிரியர் சொன்னார். இதுதான் காதல். நீ சரியான ஒருத்தி கிடைக்கும்வரை தேடிக்கொண்டே இருக்கவேண்டும். பின் ஒரு நாள் நீ உணர்வாய் நீ தேடியது ஏற்கனவே உன் கையைவிட்டு தவறிப்போய்விட்டது என்று.

இப்பொழுது மாணவன் ஆசிரியரிடம் அடுத்த கேள்வியை கேட்டான்.

"திருமணம் என்றால் என்ன? "

"இந்த கேள்விக்கு நான் பதில் சொல்லவேண்டுமென்றால் நீ சோளக்கொல்லைக்கு போய் இருப்பதிலேயே பெரிய சோளக்கருதொன்றை அறுத்துக்கொண்டு வரவேண்டும்" என்றார்.

ஆனால் ஒரு நிபந்தனை: நீ ஒரே முயற்சியில் இந்த வேலையை முடிக்க வேண்டும். திரும்பவும் செய்யக்கூடாது.

மாணவன் சோளக்கொல்லைக்கு போனான். இந்த முறை முதலில் செய்தது போல எந்த தவறும் செய்யக்கூடாது என்பதில் கவனமாக இருந்தான். அவன் சோளக்கொல்லைக்குள் புகுந்து நடுமையத்திற்கு சென்று ஒரு சராசரி அளவுள்ள சோளக்கருது ஒன்றை அறுத்து எடுத்துக்கொண்டு திருப்தியுடன் வகுப்புக்கு திரும்பினான்.

அந்த சோளக்கதிரை பார்த்த ஆசிரியர் சொன்னார், "இந்த முறை நீ உனக்கு பிடித்த ஒன்றை தேர்ந்தெடுத்து கொண்டு வந்திருக்கிறாய். இதுதான் மிகவும் சிறந்தது என்பதில் உனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. ….
"இது தான் திருமணம்"


ஆங்கிலத்திலிருந்து - நன்றி : வினோத்

Sunday, April 09, 2006

நமது பெற்றோருடன் நாம் எப்படி நடந்துக்கொள்ளவேண்டும்

அந்த சோபாவில் அமர்ந்திருக்கும் பெரியவருக்கு சுமார் எண்பது வயதிருக்கும், அவருக்கு அருகில் நின்று கொண்டிருக்கும் அவர் மகனுக்கு சுமார் நாற்பத்தைந்து வயது இருக்கும். உயர்ந்தப் படிப்பு படித்திருக்கிறார் என்பதை அவர் முகம் காட்டுகிறது.

அப்பொழுது ஒரு காகம் பறந்து வந்து ஜன்னல் கதவில் அமர்கிறது.
தந்தை மகனைப் பார்த்து "என்ன சததம்?"

மகன் : "அது ஒரு காகம் ஜன்னல் கதவில்"

சில நிமிடங்களுக்கும் பிறகு தந்தை மீண்டும் மகனைப் பார்த்து "என்ன சத்தம்"

"அப்பா, நான் இப்பத்தானே சொன்னேன் அது காகம் என்று "

சிறிது நேரம் கழிந்தது. வயதான அந்த தந்தை மறுபடியும் மகனைப் பார்த்து

"என்ன சத்தம் அது ?" என்று கேட்டார்

இப்பொழுது மகன் எரிச்சலடைந்த குரலில் "அது காகம், காகம்" என்று சத்தமாக கூறினார்.

இன்னும் சிறிது நேரம் கழிந்தது. தந்தை நான்காவது முறையாக தன் மகனை நோக்கி "என்ன சத்தம் அது" எனக் கேட்டார்

இப்பொழுது பொறுமையிழந்த மகன் சத்தமாக எதுக்காக கேட்டக் கேள்வியையே திரும்ப திரும்ப கேட்கிறீர்கள்? நான் தான் பலமுறை சொன்னேனே அது காகம்ன்னு. உங்களுக்கு இதுகூட புரியலையா?"

கொஞ்ச நேரம் கழிந்தது. தந்தை மெதுவாக சோபாவிலிருந்து எழுந்து தனது அறைக்கு போய் ஒரு பழைய நைந்து போன டைரியை கொண்டு வந்தார். அந்த டைரியை அவர் தன் மகன் பிறந்த நாளிலிருந்து பாதுகாத்து வருகிறார். அதை புரட்டி ஒரு குறிப்பிட்ட பக்கத்தை எடுத்து மகனுக்கு கொடுத்து படிக்க சொன்னார்.

அந்த டைரியில் எழுதியிருந்த வாசகங்கள் வருமாறு:

"இன்று காலையில் என் மூன்று வயது மகன் சோபாவில் என் அருகில் உட்கார்ந்து விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது ஒரு காகம் வந்து ஜன்னலில் அமர்ந்தது. அதைப் பார்த்த என் மகன் சுமார் இருபத்தி மூன்று தடவை அது என்ன என்று திரும்ப திரும்பக் கேட்டான். நானும் அவன் கேட்கும்போதெல்லாம் அது காகம் என்று சொன்னேன். ஒவ்வொரு முறையும் ஒரே கேள்வியை அவன் கேட்கும் போது நான் அவனை கட்டி அணைத்தப்படி அவனுடைய கேள்விக்கு இருப்பத்தி மூன்று முறையும் பதில் சொன்னேன். பலமுறை அவன் கேட்டும் எனக்கு சிறிதளவேனும் அவன் மீது கோபமோ, எரிச்சலோ உண்டாகவில்லை அதற்கு பதில் அந்த அப்பாவி குழந்தையின் மீது அன்பும் பாசமும் தான் அதிகமாயிற்று."

அந்த சிறு குழந்தை இருபத்திமூன்று முறை அது என்ன என்று கேட்டும் அந்த தந்தை எரிச்சலடையாமல் பொறுமையாக அந்த குழந்தைக்கு பதில் சொன்னார்.

இன்று அதே தந்தை தன் அதே மகனிடம் அதே கேள்வியை வெறும் நாலு முறை கேட்டதற்கு அந்த மகன் எரிச்சலையும் கோபத்தையும் காட்டினார்.

இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன:

உங்கள் பெற்றோருக்கு வயதாகி விட்டால் அவர்களை ஒதுக்கவோ, அவர்களை உங்களுக்கு ஒரு பாரமாகவோ நினைக்காதீர்கள். அவர்களுடன் அன்பாக நாலு வார்த்தை பேசுங்கள், பணிவாக இருங்கள், அவர்களுக்கான மரியாதையை கொடுங்கள்.அவர்களை புரிந்துக் கொள்ளுங்கள்.

இன்று முதல் சத்தமாக உரக்க சொல்லுங்கள், "என் பெற்றோர் எப்பொழுதும் சந்தோசமாக இருக்கவேண்டும். நான் சிறு குழந்தையாக இருந்தப் போதிலிருந்து அவர்கள் என்னை பாதுகாத்து வளர்த்து வந்திருக்கிறார்கள். தன்னலமற்ற அன்பை அவர்கள் என்மீது எப்போதும் காட்டியிருக்கிறார்கள். எல்லா கஸ்டத்தையும், துயரங்களையும் தாங்கள் ஏற்றுக்கொண்டு, வெயில், புயல், மழை அனைத்தையும் அவர்கள் ஏற்றுக்கொண்டு என்மீது ஒரு சிறு தூசியும் படாமல் பாதுகாத்து இன்று என்னை இந்த அளவிற்கு சமுதாயத்தில் ஒரு உயர்நிலைக்குக் கொண்டுவந்திருக்கிறார்கள். இன்றைய என் நிலைக்கு அவர்களே காரணம்."

இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள், "நான் எனது வயதான பெற்றோர்களுக்கு மிக சிறந்த முறையில் சேவை செய்வேன். அவர்கள் எப்படி நடந்துக்கொண்டாலும் நான் என் பெற்றோரிடம் மிக நல்ல அன்பான வார்த்தைகளை மட்டும் பேசுவேன்."

இந்த உலகில் முடியாது என்று எதுவுமே இல்லை. முடியும் என்றொரு வார்த்தை இருப்பதால் தான் முடியாது என்ற வார்த்தை தோன்றியது. ஆதலால் முடியும் என்பது நிச்சயமான உண்மை.

Nothing in this world is IMPOSSIBLE ,,, coz the word IMPOSSIBLE itself says I M POSSIBLE..
KEEP SMILING ALWAYS

என்றும் புன்னகை உங்கள் அணிகலனாய் இருக்கட்டும்

நன்றி: பரமேஸ்வரி.