Thursday, May 15, 2008

கிரிக்கெட் சூதாட்டம் - ஒரு பார்வை


//கொளுத்தும் வெயில் காலையிலிருந்து நம்மை வாட்டியெடுக்க மாலையானால்
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் சுடச்சுட நடந்து நம் இதயத்துடிப்பை எகிர
வைத்துக் கொண்டிருக்கும் நாட்கள் இவை. விளையாட்டை ரசித்துப் பார்த்துக்
கொண்டிருக்கும் இந்த வேளையில், பகிரங்கமாக நடந்து கொண்டிருக்கிறது
சூதாட்டம் ஊடகங்களின் துணையுடன். நேற்றைய போட்டியின் நடுவே எதேச்சையாக
ஹலோ பண்பலை (Hello FM 106.40MHz) கேட்க நேர்ந்தபோது முற்றிலும் அதிர்ந்து
போனேன். அந்த பண்பலை ஒலிபரப்பு நிகழ்ச்சியில் நடந்தது இது தான். ஒரு ஓவர்
வீசப்படும் போது இந்த நிகழ்ச்சியில் மூன்று பேர் பங்கேற்கலாம். நேயர்கள்
அந்த ஓவரில் எடுக்கப்படும் ஓட்டங்களைத் தொலைபேசி வாயிலாகக் குறிப்பிட
வேண்டும். குறிப்பிடப்பட்ட‌ ஓட்டங்கள் எடுக்கப்பட்டால், அந்த ஓவருக்காக
நிர்ணயிக்கப்பட்ட பரிசுத்தொகை அந்த நேயருக்கு வழங்கப்படும்.
நிர்ணயிக்கப்பட்ட‌ பரிசுத்தொகையோ பத்தாயிரம் ரூபாய் வரை. இரு நேயர்கள்
ஒரே அளவிலான ஓட்டங்களைக் குறிப்பிட்டால், பரிசுத்தொகை வழக்கம் போல்
பகிர்ந்தளிக்கப்படும். போதாக்குறைக்கு, குறுந்தகவல் போட்டிக் கேள்விகள்
வேறு. அதில் ஜெயித்தால் ஐந்தாயிரம் பரிசு.(நன்றி சகாரா தென்றல்)//முத்தமிழ் குழுமத்தில் வந்த ஒரு மடலில் முதல் பத்தி இது.

கிரிக்கெட் சூதாட்டம்

கிரிக்கெட் சூதாட்டம் என்பது மேலே குறிப்பிட்டது அல்ல. இதுவும் ஒரு வகையில் சூதாட்டம் என்றாலும் கிரிக்கெட் சூதாட்டம் இதை விட பன்மடங்கு பெரியது

கொஞ்சம் விவரமாகவே சொல்வதென்றால்:

போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பே சூதாட்டம் தொடங்கிவிடும்.

புக்கிகள் (குதிரைப்பந்தயத்தில் இந்த சொற்றொடர் வழங்கப்படுகிறது, தரகர் என தமிழில் சொல்லலாம்) இவர்கள் மூலமே சூதாட்டம் நடைபெறுகிறது.

ஆட்டம் தொடங்குவதற்கு முன் இரு அணிகளிலும் யார் யார் இருப்பார்கள் என்று தொடங்கி பந்தயம் ஆரம்பிக்கும். அதற்கும் பணம் கட்டப்படும். பிறகு எந்த அணி டாஸில் ஜெயிக்கும் என ஒரு பந்தயம் நடக்கும். இதில் பெருமளவு பணம் போடப்படும்.

டாஸில் ஜெயித்த அணி பந்து வீசுமா அல்லது மட்டையை பிடிக்குமா என ஒரு பந்தயம்
அடுத்து முதல் பந்தை யார் வீசுவார்கள் என ஒரு பந்தயம். முதல் பநதை யார் அடிப்பார்கள் என இன்னொன்று. முதல் பந்தில் வெளியேறுவாரா இல்லையா என ஒரு பந்தயம், எத்தனை ஓட்டங்கள் எடுப்பார் என ஒரு பந்தயம், முதல் பந்து எத்தனை வேகத்தில் வீசப்படுகிறது என பந்தயம், யார் யார் எங்கெங்கு நிற்பார்கள் என பந்தயம், விக்கெட் கீப்பர் யார் எனவும் அவர் எத்தனை பந்துகளை பிடித்து எத்தனை விளையாட்டு வீரர்களை வெளியேற்றுவார் என பந்தயம். பிறகு ஓட்டங்கள் எடுப்பவர் எத்தனை ஓட்டம் எடுப்பார் என பந்தயம், ஒவ்வொரு பந்துக்கும் எத்தனை ஓட்டங்கள் என பந்தயம், இந்த பந்து நோ பால், இந்த பந்து லெக்பை, இந்த பந்து வைட் என ஒவ்வொன்றுக்கும் பந்தயம் நடந்துக்கொண்டே இருக்கும்.
ஒரு பந்துவீச்சாளர் எத்தனை விக்கெட் எடுப்பார், எத்தனை ஓட்டங்கள் கொடுப்பார் என பந்தயம்.

இப்படி எல்லாவற்றுக்கும் பணம் கட்ட முடியும்.

சிறிய தரகு நடக்கும் இடங்களில் நீங்கள் கட்டும் பணத்துக்கு ஜெயித்தவுடனே லாபத்தை கொடுத்துவிடுவார்கள்.

பெரிய பணமுதலைகள் பொதுவாக தொலைபேசிகள் மூலம் பந்தயத்தில் விளையாடுவார்கள்.

ஒரு நாளில் கோடிக்கணக்கில் பணம் புரள்கிறது.

இந்த பந்தயங்களில் இன்னொரு முக்கிய அம்சமும் இருக்கிறது

அதாவது ஒவ்வொரு வீரருக்கும் ஒரு விலை வைத்திருப்பார்கள். அந்த விலையில் நீங்கள் பணம் கட்டலாம். இந்த விலை அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும்.

உதாரணமாக

ஜெயசூர்யா விளையாடுகிறார் என வைத்துக்கொள்ளுங்கள்

முதல் பந்தில் ஆறு ரன் எடுப்பார் என பந்தயம் என்றால் தரகர்கள் இவ்வாறு விலை நிர்ணயிப்பார்கள் = இதற்கு விலை 1/1, 1/2, 3/2, 2/1,3/1,4/1,5/1.....20/1 இன்னும் போய்க்கொண்டே இருக்கும்


புரியாதவர்களுக்கு:

1/1 என்றால் நீங்கள் நூறு ரூபாய் கட்டினால் அவர்கள் இருநூறு ரூபாய் தருவார்கள்
1/2 என்றால் நீங்கள் நூறு கட்டினால் 150 கிடைக்கும்
அதே போல 5/1 என்றால் நீங்கள் 100 கட்டினால் 500+100 = 600 கிடைக்கும்
20/1 என்றால் 2000+100=2100 கிடைக்கும்


இது ஒவ்வொரு வீரருக்கும் மாறும். அதாவது சிறந்த மட்டையாளர் என்றால் அதிகமான தொகை கிடைக்கும் வாய்ப்பு குறைவு. மேலும் ஆரம்பத்தில் ஒரு மட்டையாளர் எப்படி ஆடுகிறார் என்பதை பொருத்தும் தொகை மாறும்.

உதாரணமாக ஜெயசூர்யா ஐபில் போட்டிகள் பலவற்றில் சரியாக விளையாடவில்லை
என்பதால் நேற்று அவருக்கு ஆரம்பத்தில் அதிக விலை இருக்கும் வாய்ப்பு மிக அதிகம். அதாவரு 5/1 வரை கிடைக்கும். இரண்டு மூன்று ஓவர்கள் முடிந்த பிறகு அவர் இன்று நன்றாக விளையாடுவார் என்ற நம்பிக்கை வரும் போது விலை 3/1, 2/1 என குறையும் வாய்ப்பு இருக்கிறது.

அதே நேரத்தில் கடைசியாக வரும் பந்து வீச்சாளர்களுக்கு 20/1 வரை விலை இருக்கும். அடித்தால் சிக்ஸர் இல்லேன்னா அவுட் என இது மிக பெரிய அளவில் நடைபெறும் பந்தயமாகும்.

இந்த அடிப்படையில் தான் பொதுவாக சூதாட்டங்கள் சிறிய அளவு முதல் பெரிய அளவு வரை உலகம் முழுவதும் நடைப்பெறுகிறது.

இதுதான் கிரிக்கெட் சூதாட்டம் என பொதுவாக சொல்லப்படுகிறது.

இன்னும் விவரம் தெரிந்தவர்கள் மேலும் எழுதலாம்.

டிஸ்கி: மேலுள்ள விவரங்கள் உங்களுக்கு தெரியவேண்டும் என்பதற்காக மட்டுமே. இதில் ஈடுபடுவதை தவிர்ப்பதே நல்லது. தங்க நாணயம், சிட் பண்ட் போன்றவற்றை விட மிக மோசமானது இது.

4 comments:

said...

இவ்வளவு விலா வரியா எழுதிட்டு, பிறகு சூதாட வேணாம்னா எப்படிங்க.? எதுக்கும் ஒரு கை ஆடிப் பாத்துடலாமே :)

said...

இப்படில்லாம் கூட நடக்குதா?..

புரியுற மாதிரி விளக்கி சொன்னதுக்கு நன்றிகள் மஞ்சூர் அண்ணா:)

said...

//(நன்றி சகாரா தென்றல்)///

ஆஹா.. கவிஞர் சகாரா தென்றல் இப்போ பொதுப்பிரட்சனை விமர்சனங்களிலும் கலக்குகிறாரா? வாழ்த்துக்கள் அவருக்கு:)

said...

நல்லா விலாவரியா எழுதறீங்க அண்ணா...நன்றி..

ஒரு சந்தேகமும் கூட..

இப்படி ஒரு ஆட்டகாரரின் மீது பணம் கட்டிவிட்டு சிலபுள்ளிகள்(பெரிய) ஆட்டக்காரர்களையும் விலைக்கு வாங்கி விடுவதும் நடக்கிறது தானே?

அந்த வகையில் தானே நம்மூரு அசாரூதீன் அப்பீட் ஆனாரு..

எப்படியோ இந்த பணபுழக்கமெல்லாம் கருப்பு பணமா தானே போகும்..

நானும் சிவாஜி மாதிரி ஒரு ஆபிஸ் வெச்சு யார்யார்கிட்ட எவ்ளோ பணமிருக்குன்னு கேட்டு பாதிய லவட்டிகிட்டு பாதிய வருவாய் துறைக்கு காட்டி கொடுக்கலாமின்னு பெரிய யோசனையவே கிளம்ப்பிட்டுச்சு உங்க பதிவு...